
நாமக்கல்
29.07.2022
கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வரும் 03.08.2022 அன்று புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா. பி. சிங் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் 02.08.2022 மற்றும் 03.08.2022 ஆகிய 2 நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவின் போது அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சிகள், மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளது
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த அறிவிப்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் குறிப்பிட்டுள்ளதாவது :-
இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால்,
எதிர்வரும், 03.08.2022(ஆடி மாதம் 18-ஆம் நாள்) புதன் கிழமை அன்று வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளதால், 03.08.2022 ஆம் நாளன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அடுத்து வரும் 27.8.2022 அன்று சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. என்றும்
மேலும், பார்வை 1இல் காணும் அரசாணையின் படி இந்த உள்ளூர் விடுமுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம், 1881 (Under Negotiable Instruments Act, 1881 ) – இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2022 அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும்பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவ்விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்
