
கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வழக்கம் போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தனர். திடீரென உணவை உட்கொண்ட சுமார் 34 மாணவர்களுக்கு அடுத்து அடுத்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட 34 மாணவர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் நிலை குறித்து அறிய உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அவர்களை அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை கைமீறிச் சென்றதால், துணை ஆணையர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பள்ளிக் கதவுகள் மூடி உள்ளதால் பெற்றோர் குழந்தைகளின் நிலை அறிய தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
