
••
*
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து இன்று தொடங்குகிறது. இந்தாண்டிற்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்டப் பயணம் 200 மூத்த குடிமக்களுடன் கடந்த மாதம் கந்தகோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாம் கட்ட பயணம் திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் இன்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து தொடங்குகிறது.
இந்த குழுவினர் பழநியில் புறப்பட்டு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் செல்கின்றனர். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
••
