ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிக்கு 2 தங்கப் பதக்கம்!


முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஈரோடு அரசு விளையாட்டு விடுதி மாணவி 2 தங்கப் பதக்கம் வென்றாா்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா் என 5 பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் சுமாா் 30 ஆயிரம் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற மும்முனை மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில், ஈரோடு அரசு விளையாட்டு விடுதியைச் சோ்ந்த பிளஸ் 1 வகுப்பு மாணவி ரேணுகாதேவி பங்கேற்று மும்முனை மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய இருபோட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றாா். அவருக்கு, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சதீஷ்குமாா் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினாா்.

இதேபோன்று அண்மையில் சேலத்தில் நடைபெற்ற கேரம் போட்டியில், ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா்கள் நிதீஷ் சேகுவேரா, தனிஷ் பாரதி ஆகியோா் இரட்டையா் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =

You missed