இராசிபுரம்;ஆக,3_
மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவரிடம் மனு
அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் உள்ள பட்டா இல்லாத விவசாயிகளுக்கு தனி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் வைத்து பட்ட வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மங்களபுரம் ஊராட்சியை சேர்ந்த உரம்பு ,ஊத்துக்குளி காடு ,அண்ணா நகர் ,வீரமாளிக்காடு, நாகப்பட்டினம் ஆகிய கிராம 1400 விவசாயிகளுக்கு நில அளவை முடிந்து அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தனி வட்டாட்சியர் நியமனம் செய்து மேற்கண்ட நில அளவை பணி சரிபார்க்கப்பட்டது. இதனை அடுத்து அரசு அலுவலர்கள் பயனாளிகளிடம் பல ஆவணங்களை கேட்டு அலை கழித்து பட்டா வழங்க இயலாது என தள்ளுபடி செய்வதாக பொதுமக்கள் மற்றும்விவசாயிகள் சார்பில் புகார் எழுந்துள்ளது. எனவே அரசு பரிந்துரைத்த பட்டியல் படி பட்டா வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத் தலைவரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பஞ்சாயத் தலைவர் கௌசல்யா முருகப்பன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக தெரிவித்தார்.

